பெங்களூரு பள்ளியில் எச்1என்1 பரவல்: 500 மாணவர்கள், 21 ஆசிரியர்களுக்கு உடல்நலக்குறைவு!

பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 500 மாணவர்கள், 21 ஆசிரியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், இரு நாள்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கிளார்க் சாலையில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இரண்டு பேருக்கு பன்றிக் காய்ச்சல் எனப்படும் எச்1என்1 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல் வலி ஏற்பட்டுள்ளதால், திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்துக்கு வெளியே செயல்படும் தெருவோர உணவக விற்பனையாளர்கள் மற்றும் வியாபாரிகள், சுகாதாரமற்ற முறையில் குப்பைகளை தேக்கிவைத்துள்ளதால் மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் முன்வைத்துள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள உணவு விற்பனையகங்களில் சுகாதாரம் தொடர்பான ஆய்வை மேற்கொள்ள உள்ளாட்சி அதிகாரிகள் பள்ளி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளை அணுகியுள்ளதாகவும், நிலைமை மோசமடைவதற்கு முன்பே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.