கண் பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் வாருங்கள் – மருத்துவர் மலரவன் அறிவுறுத்து.
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது இடம்பெற்ற அதிகளவிலான வாணவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பாடு காரணமாக பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர். இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் டாக்டர் எம். மலரவன் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.
கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம்.
உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவை நாடுங்கள்.
குறிப்பாக நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனமாக அவதானிக்க வேண்டும்.
கண்களைத் தேய்க்க வேண்டாம்.
சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.
சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.
“கண் பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுங்கள்” என்றும் கண் வைத்திய நிபுணர் டாக்டர் எம். மலரவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
