அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் பத்து நாள் பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
அனுராதபுரம் – கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், பிறந்து 10 நாள்களேயான பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பதவிஸ்ரீபுர பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் பயணித்த ஓட்டோவும், எதிரே அனுராதபுரத்திலிருந்து கெபிதிகொல்லாவ நோக்கிப் பயணித்த கப் ரக வாகனமும் ஒன்றோடொன்று மோதியே இந்தக் கோர விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பதவிஸ்ரீபுர பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய தாய், அவரது 26 வயதுடைய மகள் மற்றும் பிறந்து 10 நாள்களேயான பச்சிளம் குழந்தை ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஓட்டோவில் பயணித்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ஓட்டோவைச் செலுத்திய 31 வயதுடைய சாரதி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, கெபிதிகொல்லாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்துடன் தொடர்புடைய கப் ரக வாகனத்தின் சாரதி கெபிதிகொல்லாவ பொலிஸாரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் கெபிதிகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
