தந்தை செல்வாவின் பரம்பரை இடுகாட்டில் அவரின் நினைவுத் தூபி சூறையாடப்பட்டது வல்லை – அராலி வீதியில் தெல்லிப்பளையில் சம்பவம்.

யாழ். தெல்லிப்பளையில், வல்லை – அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை இனந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர்.

தந்தை செல்வா குடும்பத்தவரது பரம்பரை இடுகாட்டில் இருந்த தூபியின் மேல் பகுதியே சூறையாடப்பட்டுள்ளது.

போரின் பின்னர் தெல்லிப்பளை பிரதேசம் விடுவிக்கப்பட்டபோது அங்கு போரின் முன்னர் இருந்த தூபியை ஒத்த தூபி ஒன்று 2012 ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டது.

இவ்வாறு புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த தந்தை செல்வாவின் தூபியே நேற்றுமுன்தினம் மாலை இனந்தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அயலவர்களால் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தூபியின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க அலங்கார வடிவப் பொருள்களை அபகரிக்கும் நோக்கில் இந்தச் சூறையாடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.