மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் சர்வாதிகார ஆட்சியை நடத்த அரசு முயற்சி – ஹர்ஷன ராஜகருண எம்.பி. குற்றச்சாட்டு.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல், அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாகச் சுமார் 20 ஆண்டுகள் தேர்தல்களின்றி வடகொரியாவைப் போன்ற சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க அரசு முயன்று வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண குற்றம் சாட்டினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு மக்களும் சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வரும் நிலையில், அதனைப் புறக்கணித்துவிட்டு முழு உலகமும் எதிர்க்கும் 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவர அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. ஒரேயொரு அரசியல் கட்சி மட்டுமே நாட்டை ஆட்சி செய்யும் ஒரு கட்சி ஆட்சி முறையை அமைத்து, தேர்தல்கள் இன்றி நீண்ட காலம் ஆட்சியைத் தொடரவே அரசு திட்டமிடுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாலேயே ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை பறிபோனது.

தற்போதைய அரசு சட்டபூர்வமான முறையில் சர்வாதிகாரப் பாதையை நோக்கிச் செல்வதாலேயே ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச அமைப்புகளும் இந்தத் திருத்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன.

எதிர்க்கட்சியினரே சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்றுவதாக அமைச்சர்கள் கூறுவது வேடிக்கையானது. மகாநாயக்க தேரர்கள், கத்தோலிக்க திருச்சபை மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற முதன்மையான அமைப்புகள் ஏமாறும் அளவுக்கு அறிவில்லாதவர்கள் அல்லர்.

அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் நாடு பாரிய சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.” – என்றும் அவர் எச்சரித்தார்.

Leave A Reply

Your email address will not be published.