இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று இலங்கை விஜயம்! – உயர்மட்ட குழுவும் கூட அவருடன் பயணம்.

இந்தியாவின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றும் அவருடன் இந்த விஜயத்தில் இணைந்துள்ளது.

இந்தப் பயணத்தின்போது, இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் இலங்கையின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து பல்வேறு முக்கிய இருதரப்பு விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், கொழும்பில் உள்ள இந்திய வம்சாவளியினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இது குறித்து மத்திய தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளையும், பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பன்முக ஒத்துழைப்பையும் பகிர்ந்து கொள்கின்றன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய பொருளாதார உதவியும், 2025ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலின் போது மீட்புப் பணிகளில் களமிறங்கிய முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா உதவிக்கரம் நீட்டியதும் இவ்விரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

இது, ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கை மீதான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கின்றது.

பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்தப் பயணம் இந்தியா – இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.