இன அழிப்பை மேற்கொண்டவர்களுடன் சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்றனர் – மக்கள் சந்திப்பில் சிறீதரன் எம்.பி. கடும் விசனம்.

“எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும் நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல் ஆக்கியவர்கள் என நாம் குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினருடன் இன்று சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்றனர்”- என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் விசனம் தெரிவித்தார்.

கிளிநொச்சி, கோணாவில் வட்டாரத்துக்கான மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கோணாவில் கிழக்குப் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் வட்டாரப் பிரதேச சபை உறுப்பினர் ச. சிவயோகலக்சுமி உள்ளிட்ட பல பிரதேச மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,

“மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வு வயதை 62 இலிருந்து 67 ஆக அதிகரிப்பதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும், வழக்கறிஞர்கள் சங்கமும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த விடயம் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வருகின்றது. இதன்போது அந்தத் திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதற்கு எமது ஆதரவு எப்போதுமே இல்லை.

அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வு வயது 65 என்றால் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நீதிபதிகளின் வயதை மட்டும் அதிகரிப்பதன் ஊடாக, தங்களுக்கு ஏற்ற நீதிபதிகளை நியமித்து தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்ள அரசு முயற்சிக்கின்றது என்ற வலுவான சந்தேகம் எழுகின்றது.

இதனால் பாதிக்கப்படப்போவது எதிர்க்கட்சியினராகிய நாங்கள்தான். நாங்கள் நாட்டின் ஆளுங்கட்சி அல்ல. எனினும், பிரதேச சபைகளில் மக்கள் எங்களிடம் பொறுப்பை வழங்கியுள்ளனர். அந்தப் பொறுப்பிலிருந்து நாங்கள் எக்காலத்திலும் விலகிச் செல்ல முடியாது.

தேர்தல் காலங்களில் மக்கள் சில நேரங்களில் ஆராயாமல் அல்லது கோபத்தின் அடிப்படையில் சிலரைத் தெரிவு செய்கின்றனர். ஆனால், பின்னர் அவர்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள் என்பதை மக்கள் கவனமாக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

எங்களை அழித்தவர்களுடன் இன்று சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்ற இவ்வாறானதொரு கடினமான அரசியல் சூழலில்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.