வடக்கில் சீரற்ற காலநிலையால் 91 ஆயிரம் பேர் பாதிப்பு!  3,500 வீடுகள் சேதம்!

வடக்கில் சீரற்ற காலநிலையால் 91 ஆயிரம் பேர் பாதிப்பு!  3,500 வீடுகள் சேதம்!

வடக்கு மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் 27 ஆயிரத்து 613 குடும்பங்களைச் சேர்ந்த 91 ஆயிரத்து 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இம்மாகாணத்தில் 98 வீடுகள் முழுமையாகவும்,  3,414 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அந்தவகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரையில் 23 ஆயிரத்து 304 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 358 குடும்பங்களைச் சேர்ந்த 1,340 பேர் 21 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

வடக்கில் சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டமே அதிக பாதிப்புக்களைச் சந்தித்துள்ளது.

இம்மாவட்டத்தில் கடுமையான காற்று மற்றும் வெள்ளத்தால் 93 வீடுகள் முழுமையாகவும்,  2,969 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

2008ஆம் ஆண்டு நிஷா புயலால் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர்  தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.