பேரணியில் கலந்து கொண்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.

பொத்துவில் முதல் பொலிகண்டிவரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களால் பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பேரணிக்கு தடைகோரி ஏஆர் அறிக்கை ஊடாக பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையங்களால் தொடரப்பட்ட வழக்குக்கு நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, குறித்த மூன்று பொலிஸ் நிலையங்களாலும் இந்த ‘பி’ அறிக்கைகள் பேரணியில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றக் கட்டளைச் சட்டம் 55 (1), 56 2 (ஆ) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த பி அறிக்கைகளை பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தனித்தனியே தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட வர்கள் உட்பட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு எதிராகவே இந்த அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கை மீதான விசாரணைகள் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றதையடுத்து பருத்தித்துறை பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனைய இரு பொலிஸ் நிலையங்களின் வழக்குகளும் மே மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.