இலங்கைத் தமிழரின் உரிமையை உறுதிப்படுத்த இந்தியா தொடர் நடவடிக்கை எடுக்கும்! தமிழகத்தில் மோடி.

இலங்கைத் தமிழரின் உரிமையை உறுதிப்படுத்த இந்தியா தொடர் நடவடிக்கை எடுக்கும்! தமிழகத்தில் மோடி உறுதி.

“இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான யாழ்ப்பாணத்துக்குச் சென்ற ஒரே ஒரு இந்தியப் பிரதமர் நான் மட்டுமே. அதேபோல் அங்கு வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரச தலைவர்களிடம் வலியுறுத்தும் ஒரே ஒரு அரசு மத்திய அரசும் நாமே.”

இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தமிழகத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகத்துக்கு விஜயம் செய்தார்.

அங்கு மெட்ரோ ரயில் திட்டம், மின்சார ரயில் திட்டம், கல்லணைத் திட்டம், அர்ஜூன் பீரங்கி தயாரிப்புத் திட்டம் என்பனவற்றை அவர் தொடக்கி வைத்தார்.

இதன்போது கடந்த கால அரசுகளைவிட தற்போதைய மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு விதமாக உதவி செய்து வருகின்றது எனவும், சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

இந்தியா கட்டிக் கொடுத்த யாழ்ப்பாணம் கலாசார மையம் விரைவில் திறக்கப்படவுள்ளது எனவும் அவர் உறுதியளித்தார்.

அத்தோடு இலங்கைத் தமிழர்களுக்காக சுமார் 50 ஆயிரம் வீடுகளை மத்திய அரசு கட்டிக்கொடுத்துள்ளது எனவும், இலங்கையில் தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மத்திய அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும், இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன் தற்போது இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் ஒருவர் கூட இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உலகின் தொன்மையான மொழி ‘தமிழ்’ என்று கூறிய அவர், ‘வணக்கம் சென்னை’, ‘வணக்கம் தமிழ்நாடு’ என்று கூறி உரையை ஆரம்பித்தார்.

அத்தோடு இன்று தொடங்கப்பட்டுள்ள அபிவிருத்தி நலத்திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும் எனவும், நீர் நிலைகளைச் சரியாகப் பயன்படுத்தியதற்கும் உணவு தானியங்கள் தயாரிப்பில் வரலாறு படைத்ததற்காகவும் தமிழ்நாட்டின் விவசாயிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.