காரைநகரில் நாளை மறுதினம் காணி அளவீடு நடவடிக்கை! தடுத்துநிறுத்த ஒன்றிணையுமாறு அழைப்பு.

காரைநகரில் நாளைமறுதினமும் காணி அளவீடு நடவடிக்கை! – தடுத்துநிறுத்த ஒன்றிணையுமாறு அழைப்பு

யாழ்., காரைநகர் பகுதியில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்கு 50 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை அளவீடு செய்யப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் ஜே/45 கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட 61 தனியார் குடும்பங்களுக்குச் சொந்தமான 51 ஏக்கர் அளவுடைய காணியானது இவ்வாறு நில அளவைத் திணைக்களத்தினரால் அளவீடு செய்யப்படவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மயிலிட்டி போன்ற பகுதி – மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட நீலங்காடு பகுதி கடற்படையினரின் ஆக்கிரமிப்பால் மீன்பிடி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன. இந்தநிலையில், எலறா கடற்படைத்தளத்துக்காகத் தனியாருக்குச் சொந்தமான நீலங்காடுப் பகுதியில் உள்ள 51ஏக்கர் காணி கையகப்படுத்தும் நோக்கில் அளவிடப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, குறித்த காணி அளவீடு செய்யும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை 19ஆம் திகதி குறித்த பகுதி பொதுமக்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று காலை காரைநகர் இந்துக் கல்லூரிக்குச் சொந்தமான காணியினை அளவீடு செய்து எலறா கடற்படைத்தளம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பலத்த எதிர்ப்பால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.