எடப்பாடி பழனிச்சாமி நாளை வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த தேர்தலில் அவர் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக இன்று இரவு கோவைக்கு விமானம் மூலம் வரும் அவர் அங்கிருந்து காரில் சேலம் வருகிறார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இரவு தங்கும் அவர் நாளை காலை 7 மணிக்கு சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு செல்கிறார்.

பின்னர் அருகில் உள்ள பெரியசோரகை சென்றாயபெருமாள் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில்முன்பு இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஒவ்வொரு தேர்தலின்போதும் எடப்பாடி பழனிசாமி இந்த கோவிலில் வழிபாடு நடத்திவிட்டுதான் பிரசாரம் தொடங்குவது வழக்கம்.

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி சென்றாய பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்திய பின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். தற்போது தனது தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை இந்த கோவில் முன்பு இருந்து நாளை தொடங்குகிறார்.

பின்னர் நங்கவள்ளி, வனவாசி ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கிறார். இதை தொடர்ந்து பகல் 11 மணிக்கு எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதன்பிறகு எடப்பாடி ஒன்றிய பகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார்.

மாலையில் எடப்பாடியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதை தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி செல்லும் வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அவர் பிரசாரம் செய்யும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.