நீதிக்காக ஓங்கி ஒலித்தவர் ஆயர் இராயப்பு!தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரங்கல்.

“முன்னாள் மன்னார் மறை மாவட்ட பேராயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றோம். ஈழத்தமிழரின் உரிமைக்கான போராட்டக் காலத்திலும், போர் நிறைவு பெற்றதன் பின்னரும், ஒடுக்கப்படும் ஈழத்தமிழ் மக்களின் பலமான குராலாகச் செயற்பட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் மறைவு கத்தோலிக்க திருச்சபைக்கும், தமிழ்த் தேசிய மக்களுக்கும் ஈடுசெய்யப்பட முடியாத பேரிழப்பாகும். தமிழ் மக்களுக்கான நீதிக்காக ஓங்கி ஒலித்த குரல் இன்று அமைதியில் உறங்குகின்றது. தமிழ் மக்களின் உணர்வுகளுடன் கலந்து, உடலால் அமரத்துவம் அடைந்த ஆண்டகையின் ஆன்மா நித்திய அமைதி அடைவதாக!”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கை அரசு தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தை இன அழிப்புப் போர் மூலம் 2009 மே 18 இல் முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர், தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்க முயன்றபோது, தமிழ்த் தேசத்தில் நடைபெற்ற இன அழிப்புக்கு நீதியைக் கோரி, சர்வதேச பொறுப்புக்கூறலை எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி வலியுறுத்தி, தமிழ் சிவில் சமூக அமையத்தினூடாக ஆண்டகை தலைமையை வழங்கியிருந்தார்.

குருத்துவத்தின் புனிதத்தையும், மேன்மையையும் தாங்கி, ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் உண்மையானதும் நீதியானதுமான பொறுப்புக்கூறலுக்காக ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

ஆண்டகையின் வெற்றிடத்தை நிரப்புவது என்பது கடினமான பணியாகும். ஈழத்து திருச்சபையின் பணியாளர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை ஆண்டகையின் வாழ்வும் குருத்துவமும் எடுத்துக்காட்டியுள்ளது.

இயேசு கிறிஸ்து பணிக்குருத்துவத்தை நிறுவியதை நினைவுகூரும், புனித வியாழன் நாளாகிய இன்று ஆண்டகையும் தனது தலைமைக் குருவின் திருப்பாதம் நாடிச்சென்று அமைதியில் உறங்குகின்றார்.

ஆண்டகையின் பேரிழப்பால் துயருறும் கத்தோலிக்க திருச்சபையினதும், அவரது குடும்பத்தினரதும் துயரில் ஈழத் தமிழ் மக்களுடன் இணைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாமும் பங்குகொள்கின்றோம்.

இறைவனின் உன்னத திருப்பாதம் நாடிச்சென்ற ஆண்டகை, இறைவனின் அருகில் இருந்து, விடுதலைக்காக ஏங்கும் தமிழ் தேச இனத்துக்காகப் பரிந்துபேசி, எமக்கான சக்தியை வழங்குபவராக தொடர்ந்தும் இருப்பார் என்னும் நம்பிக்கை எமக்குண்டு.

இன்றிலிருந்து ஆண்டகையின் திருவுடல் அடக்கம் செய்யப்படும் வரை தமிழ்த் தேசத்தில் துக்க நாளாக அனுஷ்டிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.