யாழில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கும், வவுனியாவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 660 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே, 13 பேருக்குக் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது.

இதில், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும், கரவெட்டி, வேலணை மற்றும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தலா ஒருவருக்கும் எனச் சுயதனிமைப்படுத்தலில் இருந்த 8 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த ஒருவருக்கும் என இரண்டு பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதேவேளை, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக் கைதிகள் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.