இலங்கை மீண்டும் முடங்கும் அபாயம் : கொரோனா தடுப்புக்கான மையம் எச்சரிக்கை

“கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களில் இனி யாருக்காவது தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுடன் தொடர்புடைய பிரதேசங்கள் முடக்கப்படும். அது சில வேளைகளில் நாடு முழுவதுக்குமான முடக்கலாக அமையலாம்.”

– இவ்வாறு கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம், வெலிக்கடைச் சிறைச்சாலை ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், அங்கு பணிபுரிபவர்கள் எனப் பலருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 340 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முடக்கப்படுமா என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் சவேந்திர சில்வாவிடம் வினவியபோது,

“வெலிசறை கடற்படை முகாமில் ஏற்பட்ட தொற்றுப் போன்று கந்தகாட்டில் ஏற்பட்ட தொற்றைக் கூற முடியாது. வெலிசறை கடற்படை முகாமில் கடற்படையினர் விடுமுறையில் வீடு சென்று வந்தார்கள். கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு ஏற்பட்டால் அங்குள்ளவர்களுக்கு பரவித்தான் அது முடிவுக்கு வரும். ஆனால், கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வீடுகளுக்குச் சென்று வந்துள்ளார்கள். அவர்களில் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டால் நிலைமை சிக்கலாம். அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்று அந்தச் சங்கிலியுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு அந்தப் பிரதேசங்களை முடக்க நேரிடலாம்” – என்றார்.

Comments are closed.