வேலையிழந்த உதவி பேராசிரியர்: கூலிக்கு பனைமரம் ஏறி நுங்கு வெட்டும் போது தவறி விழுந்து உயிரிழந்த சோகம்!!

வேலையிழந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் பனைமரம் ஏறி கூலிக்கு நுங்கு வெட்டும் போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றம் அருகே ஊரடங்கு காரணமாக வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து வீட்டில் இருந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் பனைமரம் ஏறி நுங்கு வெட்டி தரும் கூலி வேலைக்கு சென்று மரத்தின் உச்சியில் இருந்து தவறிக் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கன்னடபாளையம் நசரேத் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் லோகநாதன் (35). அலமாதி கிராமத்தில் வசித்து வந்த லோகநாதன், இரண்டு ஆண்டுகளாக வேலை இன்றி வீட்டில் முடங்கி இருந்தார். இவரது மனைவி கவிதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களுக்கு பிரியன் என்ற 2 வயது சிறுவனும் உள்ளான்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்த லோகநாதன் வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக அவ்வப்போது பனைமரம் ஏறி நுங்கு அறுத்து கொடுத்து அதில் கிடைக்கும் கூலியைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம்போல் பனை மரத்தில் ஏறி நுங்கு அறுத்து கொடுக்க முயன்றபோது பனை மரத்தின் உச்சியில் இருந்து லோகநாதன் தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து, படுகாயமடைந்த லோகநாதனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊரடங்கு காரணமாக வேலையின்றி பனைமரத்தில் ஏறி நுங்கு வெட்ட சென்று தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நிறைமாத கர்ப்பிணியாக 2 வயது கைக்குழந்தையுடன் உள்ள அவரது மனைவிக்கு உதவிட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.