நவம்பர் வரை ஊரடங்கு தொடருமா? கோடிட்டு காட்டிய மோடி

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலைக்கு இத்தாலி, அமெரிக்கா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இலக்கான நிலையில் இரண்டாவது அலையில் இந்தியா அதிக பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்தது.

ஆனால் இம்முறை நாடு தழுவிய முழு ஊரடங்கை ஒன்றிய அரசு விதிக்கவில்லை. அதேபோல் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு பெரியளவில் நிவாரணம் வழங்கவில்லை. உதாரணமாக கடந்த ஆண்டு மூன்று மாதங்கள் இஎம்ஐ செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் சில சலுகைகளை அறிவித்தது. ஆனால் இம்முறை ரேஷனில் உணவு தானியங்களை மட்டும் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டும் ஊரடங்கு சமயத்தில் இலவச உணவு தானியங்களை வழங்கியது.

இந்நிலையில் நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி, “தீபாவளி (நவம்பர் 4) வரை ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். நவம்பர் மாதம் வரை 80 கோடி பேருக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் கிடைக்கும். ரேஷனில் உணவு தானியங்கள் வழங்குவதால் 80 கோடி பேர் பயனடைவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் வரை இலவசமாக தானியங்கள் வழங்கப்படும் என மோடி தெரிவித்திருப்பதால் தளர்வுகளுடன் ஊரடங்கு நவம்பர் வரை தொடருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு பதிவான நிலையில் தற்போது ஒரு லட்சத்துக்கு பாதிப்பு குறைந்துள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டிலும் தீவிர ஊரடங்கு முடிவுக்கு வந்து தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அதே சமயம் மூன்றாம் அலைக்கான எச்சரிக்கையையும் மருத்துவ வல்லுநர்கள் விடுத்து வருகின்றனர்.

இதனால் மோடியின் நவம்பர் வரை இலவச தானியங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.