ஜி.எஸ்.பி. பிளஸ் நீக்கப்பட்டால் மீனவர் சமூகமே பெரும் பாதிப்பு சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தடைசெய்யுமாறு ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அது விரைவில் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் மீனவர் சமூகமே பாரியளவில் பாதிக்கப்படப்போகின்றது.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கப்பலொன்றால் ஏற்பட்ட தாக்கம் மோசமாக எமது நாட்டைப் பாதிக்கப்போகின்றது. பொருளாதார ரீதியில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தவுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் மீனவர் குடும்பங்கள் தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இவ்வாறான நிலையில் மேற்கு கடற்கடை மீனவர்கள் அங்கு தொழில் செய்ய முடியாத நிலையில் அவர்களை வடக்கு,கிழக்கு பகுதிகளில் தொழில் செய்ய முயற்சிகள் நடைபெறக்கூடும்.

இந்த விடயத்தில் மீன்பிடித்துறை அமைச்சர் என்பவர் நாட்டில் எந்தப் பகுதியில் மீனவர்களுக்கு இடர் ஏற்பட்டாலும் அவர் அதனைக் கவனிக்க வேண்டும்.

அதனை விடுத்து கப்பல் பிரச்சினை வந்திருப்பதன் காரணமாக வடக்கு, கிழக்கு மீனவர்கள் வருவாயை கூட்டிக்கொள்ளலாம் என அவர் கூறுவது பொறுப்பற்ற ஒரு கூற்றாகும்.

எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு மீனவர்களையும் இது பாதிக்கும்.ஏனைய இடங்களில் தொழில் செய்ய முடியாதவர்கள் இங்கு வருவதற்கான நிலை உருவாகும். அதனை அவரே கொண்டு வந்து நிறுத்தி விடுவார்.

ஆகவே, மீன்பிடித்துறை அமைச்சர் தமிழ் மக்களுக்கான அமைச்சர் எனச் சொல்லிக்காட்டுவதும், அவ்வாறான ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதும் தவறான ஒரு விடயமாகும்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது,

2015 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் அகற்றப்படுகின்றது என்ற வாக்குறுதியின் பெயரிலேயே ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீள வழங்கப்பட்டிருந்தது.

இப்போது நான்கு ஆண்டுகள் கடந்தும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படாத காரணத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தடைசெய்யுமாறு கூறியுள்ளனர்.

அது விரைவில் நடைமுறைக்கு வரும். இதனால் பெரியளவில் பாதிக்கப்படப்போவது மீன் ஏற்றுமதியே. இதனால் மீனவர் சமூகத்துக்குப் பாரிய பாதிப்பு ஏற்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.