பஸிலின் வருகை எமக்குப் பெரும் பலம்! அமைச்சர் சந்திரசேன தெரிவிப்பு.

“அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகையை ஆளுங்கட்சி பார்க்கின்றது.”

இவ்வாறு அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதால் ஏற்படவுள்ள மாற்றம் என்ன, அவர் என்ன அலாவுதீனின் அற்புத விளக்குடனா வருகின்றார் என எதிரணி உறுப்பினர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

எம்மைப் பொறுத்தவரையில் பஸில் ராஜபக்சவின் வருகையையே நாம் அலாவுதீனின் அற்புத விளக்காகவே பார்க்கின்றோம். அவர் நாடாளுமன்றம் வந்து, அமைச்சுப் பதவியை ஏற்பது எமக்குப் பெரும் பலமாக அமையும். எனவே, பஸிலின் வருகையைத் தடுக்கவே எதிரணி இப்படியெல்லாம் விமர்சனங்களை முன்வைக்கின்றது” – என்றார்.

அதேவேளை, பஸில் ராஜபக்ச பாராளுமன்றம் வருவதால் அரசியலில், பொருளாதாரத்தில் பெரிதாக எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.