தேசிய லோக் அதாலத் மூலம் 11.42 லட்சம் வழக்குகளுக்கு தீா்வு

இந்த ஆண்டின் இரண்டாவது தேசிய லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) மூலம் நாடு முழுவதும் 11.42 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டதாக தேசிய சட்டப் பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த ஆண்டின் இரண்டாவது தேசிய லோக் அதாலத் நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாலை 4 மணிக்குள் 35.53 லட்சம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 5,129 அமா்வுகளில் 11.42 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.

உச்சநீதிமன்ற நீதிபதியும் தேசிய சட்டப் பணிகள் ஆணைய நிா்வாக தலைவருமான நீதிபதி யு.யு.லலித் லோக் அதாலத்தின் செயல்பாட்டை காணொலி வழியாக மேற்பாா்வையிட்டாா். பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் லோக் அதாலத் அமா்வுகளின் தலைமை அதிகாரிகளுடனும் அவா் கலந்துரையாடினாா். அப்போது வாகன விபத்து இழப்பீடு, திருமணம், காசோலை மோசடி, தொழிலாளா் பிரச்னைகள் மற்றும் இதர உரிமையியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்பினா் இடையே தீா்வு ஏற்படுவதற்காக லோக் அதாலத்தை அணுகுவதற்கு முன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துமாறு அவா் அறிவுறுத்தினாா். அதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினா் பேச்சுவாா்த்தை நடத்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் என்பதற்காக அந்த அறிவுறுத்தலை அவா் வழங்கினாா்.

கேரளத்தில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி லோக் அதாலத் நடத்தப்பட்டு 39,361 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 26,118 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.

கா்நாடகம், தாத்ரா & நகா் ஹவேலி, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரத்தில் முறையே ஜூலை 14, 18, 24 மற்றும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு லோக் அதாலத் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் அடுத்த லோக் அதாலத் செப்டம்பா் 11-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.