ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி.

வங்கதேச அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வங்கதேச அணி.

2வது போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக மாதவரே 56 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர, கேப்டன் பிரண்டன் டெய்லர்(46), சகாப்வா(26), மியர்ஸ்(36), ராஸா(30) ஆகியோரும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்ய, 50 ஓவரில் ஜிம்பாப்வே அணி 240 ரன்கள் அடித்தது.
இதையடுத்து 241 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணி வீரர்கள் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஷகிப் அல் ஹசன், கடைசி வரை போராடி வங்கதேச அணியை வெற்றி பெற செய்தார்.

பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 96 ரன்களை குவித்தார். கடைசி வரை களத்தில் இருந்தும் அவரால் சதத்தை பூர்த்தி செய்யமுடியவில்லை. ஷகிப் அல் ஹசனின் பொறுப்பான பேட்டிங்கால் கடைசி ஓவரில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.

Leave A Reply

Your email address will not be published.