அடிபணியாத ஊடக அறத்தை இங்கு அறிமுகப்படுத்தியவர் இராஜமகேந்திரனுக்கான இரங்கலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

“கப்பிடல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திரன், அடிபணியாத ஊடக அறத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவராவார்.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கப்பிடல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திரனின் இழப்புச் செய்தி எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது 16 வயதிலே கப்பிடல் மகாராஜா நிறுவனத்தில் தனது தந்தையின் வழிகாட்டலில் வேலையை ஆரம்பித்து, 21 வயதில் அவரது தந்தையின் இழப்பின் பின்னர், சகோதரர்களுடன் இணைந்து செயற்படுத்தி வர்த்தக உலகத்தில் ஒரு ஜாம்பவானாக அவர் வலம் வந்திருந்தார். இலங்கையின் அனைத்து வர்த்தகத் துறைகளிலும் தாக்கத்தைச் செலுத்தக் கூடிய அளவுக்கு கப்பிடல் மகாராஜா கட்டமைப்பை அவர் பரவலாக்கியிருந்தார்.

இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் கூட, போட்டிபோடக்கூடிய அளவுக்கு மிகவும் முன்னேற்றகரமான மிகப்பெரிய கட்டமைப்பாக தனது நிறுவனத்தை நிலைநிறுத்தியிருந்தார்.

ஊடகத்துறையிலும் கால்பதித்த இராஜமகேந்திரன், அடிபணியாத ஊடக அறத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவராவார்.

இந்த நாட்டினுடைய ஊடகங்கள், ஒன்றில் அரச தரப்பாலோ அல்லது வேறு தரப்புக்களாலோ கையாளப்படும் அரசியல் பின்னணியில் இயங்கி வந்தபோது, நடுநிலை வகிக்கக் கூடிய வகையில், ஆட்சியில் இருக்கும் தரப்பையும் தட்டிக் கேட்கக் கூடிய, அடிபணியாத ஊடக அறத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது இராஜமகேந்திரன் தலைமையில் இயங்கக்கூடிய சக்தி, சிரச, நியூஸ் பெஸ்ட் நிறுவனங்களுக்கு தனித்துவமான இடமுண்டு.

2010ஆம் ஆண்டிலிருந்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்து, தமிழ் அரசியலிலே நடக்கின்ற மோசடிகள், கொள்கை ரீதியாக விளக்கக் கூடிய விடயங்கள், சர்வதேச மட்டத்தில் இருக்கக்கூடிய அரசியல் நிலைமைகள், அரசியல் தலைமைகளால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்ற விடயங்களை, நாம் மக்கள் மத்தியிலே வெளிப்படுத்த முயன்ற அந்தக் காலகட்டங்களில், நாம் கூறும் உண்மைகள் மக்கள் மட்டத்தில் சென்று சேரவிடாமல் பல ஊடகங்கள் ஒன்றிணைந்து இருட்டடிப்பு செய்தபோதும், எமது அரசியல் இயக்கத்துக்கென்று கணிசமான இடத்தை மகாராஜா நிறுவன ஊடகங்கள் வழங்கியிருந்தது என்பதை நாம் நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.

ஏனைய பல ஊடகங்களும் எமது தரப்பு நியாங்களை, செய்திகளை இருட்டடிப்பு செய்து எம்மைப் புறக்கணித்த நேரத்தில், மகாராஜா நிறுவன ஊடகங்கள் எமக்கு சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தது. அதற்கான காரணத்தைத் தேடி, சக்தி நிறுவனத்தில் பணியாற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களிடம் வினவியபோது, ‘அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் மக்களுக்குத் தெரிய வரவேண்டும். அதன் மூலம் கருத்து மோதல் ஒன்று ஏற்படவேண்டும். அதன் மூலம், எதுசரி என்பதை மக்களே முடிவெடுக்க வேண்டும். அந்த மக்கள் முழுமையாக அறிந்து முடிவெடுக்கக் கூடிய தன்மையைக் கொண்ட ஊடக கலாசாரத்தையே எமது ஊடகம் செய்ய வேண்டும்’ என்பது தங்கள் நிறுவனத்திக் தலைவரின் கொள்கையாகக் கருதுவதால், உங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குகின்றோம் எனக் கூறியிருந்தனர்.

அந்த அளவுக்கு ஊடக அறத்தைப் பேணிவளப்பதில் இராஜமகேந்திரன் அளப்பெரிய பங்காற்றியுள்ளார். அப்போதைய கூழலில் ஏனைய பல ஊடகங்களும் எம்மைப் புறக்கணித்த போதும், அப்படியான ஒரு வாய்ப்பை சக்தி நிறுவனம் வழங்கியமையை நன்றியுடன் நினைவுகொள்கின்றோம். இராஜமகேந்திரனது தலைமையில் கப்பிடல் மகாராஜா நிறுவனத்தால் கடைப்பிடிக்கப்பட்ட இந்த ஊடக அறமானது ஒரு நாட்டினது ஜனாநாயக தன்மைக்கு அத்தியாவசியமானதாகும்.

அத்தகைய ஊடக அறத்தையே கேள்விக்கு உட்படுத்தக்கூடிய இன்றைய அரசியல் சூழலிலே, தனிமனித சிந்தனையில், நடமாடும் பல்கலைக்கழகமாக வலம்வந்த பேராழுமையை இழந்திருக்கின்றோம்.

இராஜமகேந்திரனின் இழப்பு, இந்த நாட்டின் ஜனநாயகத்தையே கேள்விக்குட்படுத்தப்போகின்றதோ? என்று சிந்திக்கக்கூடிய அளவுக்கு, பெரும் சோகத்துக்குள் எம்மைத் தள்ளியுள்ளது. அந்தளவுக்கு ஜனநாயகத்துக்கும், உண்மைக்கும், நேர்மைக்குமாக இராஜமகேந்திரனது பங்கு அமைந்திருந்தது.

அவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் மட்டுமல்ல, ஊழல், மோசடியை எதிர்க்கின்ற, ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப முயல்கின்ற அனைத்துத் தரப்பினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இராஜமகேந்திரனின் இழப்பின் துயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பங்குகொள்வதுடன், அவரின் இழப்பால் துயருற்றிருக்கும், குடும்பத்தினர், சகோதரர்கள், உறவினர்கள், கப்பிட்டல் மகாராஜா நிறுவன குழுமத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.