இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் இன்று…

2-வது டெஸ்டில் வியப்பூட்டும் வெற்றியை ருசித்த இந்திய அணி 3-வது டெஸ்டில் ஒரேயடியாக தள்ளாடியது. இதன் முதலாவது இன்னிங்சில் வெறும் 78 ரன்னில் சுருண்டு போனது. மிடில் வரிசையில் நிலையற்ற பேட்டிங் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக கேப்டன் விராட் கோலி 5 இன்னிங்சில் ஆடி வெறும் 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆப்-ஸ்டம்புக்கு சற்று விலகி செல்லும் வகையில் பந்து வீசும் போது அதை அடிக்க முயற்சித்து ஸ்லிப் அல்லது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகிவிடுகிறார். 5 இன்னிங்சிலும் அவர் இந்த மாதிரியே விக்கெட்டை இழந்துள்ளார். தொடர்ந்து அவருக்கு இதே போல் தூண்டில் போட இங்கிலாந்து வீரர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே கோலி மிகவும் சுதாரித்து விளையாடுவதுடன், ‘கவர்டிரைவ்’ ஷாட்டுகளை அடிப்பதில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.

பந்து வீச்சில் நிச்சயம் மாற்றம் இருக்கும். முதல் 3 டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட பிரதான சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக இடம் பெறுவார் என்று தெரிகிறது. இதே போல் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா களம் காண வாய்ப்புள்ளது.

இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நேற்று அளித்த பேட்டியில், ‘ஓவல் மைதான வரலாற்றை புரட்டிப்பார்த்தால் அது சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கக்கூடியது என்பது தெரிய வரும். அஸ்வினின் சுழலின் தாக்கம் இங்கிலாந்து வீரர்களை கவலைஅடையச் செய்யும் என்பதை அறிவோம். ஆனாலும் நாளை (இன்று) காலை ஆடுகளத்தை பார்த்த பிறகே அஸ்வினை ஆடும் லெவனில் சேர்ப்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படும். இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமான ஓவர்களை வீசி வருகிறார்கள். அவர்களின் பணிச்சுமையை கவனத்தில் கொண்டே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரசித் கிருஷ்ணாவை அணியில் இணைத்துள்ளோம்’ என்றார்.

மிரட்டும் ஜோ ரூட்

இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் தான் முதுகெலும்பாக இருக்கிறார். 3 டெஸ்டிலும் சதம் விளாசி பிரமிக்க வைத்துள்ள அவர் மொத்தம் 507 ரன்கள் குவித்துள்ளார். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரின் மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவர் இந்த டெஸ்டில் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக மொயீன் அலி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜானி பேர்ஸ்டோ விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார். மார்க் வுட், ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் திரும்பியிருப்பதால் அந்த அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இங்கு நடந்த கடைசி 3 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்துக்கு உள்ளூர் சூழல் சாதகமாக இருக்கும்.

இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 13 டெஸ்டில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 5-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது. அந்த வெற்றி 1971-ம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையில் கிடைத்தது. தற்போதைய இந்திய அணியில் லோகேஷ் ராகுலும், ரிஷாப் பண்டும் இங்கு சதம் அடித்துள்ளனர்.

அணி பட்டியல்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின் அல்லது ஜடேஜா, இஷாந்த் ஷர்மா அல்லது பிரசித் கிருஷ்ணா அல்லது ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

இங்கிலாந்து: ஹசீப் ஹமீத், ரோரி பர்ன்ஸ், டேவிட் மலான், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஆலி போப், மொயீன் அலி , கிறிஸ் வோக்ஸ், கிரேக் ஓவர்டான், ஆலி ராபின்சன், ஆண்டர்சன்.

இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3, டென்4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.