தமிழகத்தில் சிறுமியின் உயிரை பறித்த சிக்கன் பிரியாணி!

தமிழகத்தில் ஹொட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இயங்கிவரும் அசைவ ஓட்டலில், ஆனந்த் என்பவரது குடும்பத்தினர் புதன்கிழமை சிக்கன் தந்தூரி பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆனந்தின் 10 வயது மகள் லோஷனாவுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். அதே போல், அந்த ஹொட்டலில் சாப்பிட்ட ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ஜாகிர் பாத்திமா, விஷ்ணு சீனிவாசன், தனியார் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலைமையின் விபரீதம் உணர்ந்து ஆரணி கோட்டாச்சியர் கவிதா, மற்றும் பொலிஸ் டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்துவிட்டு, செவன் ஸ்டார் பிரியாணி ஹொட்டலில் உணவு பொருள் பாதுகாப்பு குழுவினருடன் சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.

பிரியாணி சமைக்க கெட்டுபோன கோழி இறைச்சி பயன்படுத்தப்பட்டதா? அல்லது பிரியாணியில் வேறு ஏதும் கலக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரித்த அதிகாரிகள், ஆய்வுக்காக இறைச்சி உள்ளிட்ட சில பொருட்களை எடுத்துச்சென்றதோடு அந்த கடையையும் இழுத்துப்பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சாப்பிட்டதற்கு ஆதாரமான சிசிடிவி காட்சிகளும் அங்கிருந்து சேகரிக்கப்பட்டது. பலரது விருப்ப உணவான பிரியாணியை சாப்பிட்ட பின் சிறுமி பலியானதோடு இதுவரை 21 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அசைவ பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.