தமிழகத்தில் தாத்தா பாட்டியை எரித்துக் கொன்ற பேரன்: நெஞ்சை பதற வைத்த சம்பவம்!

தமிழகத்தின் ஆத்தூர் அருகே வீட்டை பூட்டி தீ வைத்து 16 வயது சிறுவன் தாத்தா பாட்டியை எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வசித்தது வருபவர்கள் காட்டுராஜா மற்றும் காசியம்மாள் தம்பதி. இவர்களின் மூன்றாவது மகனுக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார்.

வசதி வாய்ப்புடன் உள்ள முதல் மகன் குடும்பத்துடன் ஒப்பிட்டு, ஏழ்மையில் உள்ள மூன்றாவது மகன் குடும்பத்தை காட்டுராஜாவும், காசியம்மாளும் அவ்வப்போது தரக்குறைவாக பேசி வந்தததாக கூறப்படுகிறது.

பாட்டி-தாத்தா நமது தந்தையையும், குடும்பத்தையும் தவறாக பேசுகிறார்களே என்று அந்த 16 வயது சிறுவன் அடிக்கடி வருத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காட்டுராஜா, காசியம்மாள் தம்பதியினர் தங்களது கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பேரனான அந்த 16 வயது சிறுவன் வீட்டின் வெளியே பூட்டி தீ வைத்துள்ளார்.

இதில் வெளியே வரமுடியாதபடி வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட காட்டுராஜாவும், காசியம்மாளும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். வீடு தீப்பற்றி எரிந்தவுடன் அக்கம்பக்கத்தினர் உடன்டியாக ஆத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, காட்டுராஜா, காசியம்மாள் தம்பதி சடலமாக கிடந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை பொலிசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

தாத்தா, பாட்டி தன்னையும், தனது குடும்பத்தையும் தரக்குறைவாக பேசியதால், வேதனை அடைந்து வீட்டை கொளுத்தியதாக பொலிசாரிடம் கூறி இருக்கிறான். பேரனே தாத்தா, பாட்டியை எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.