ரிஷாத் எம்.பிக்கு மறியல் நீடிப்பு; மனைவி, மாமனாருக்குப் பிணை.

சிறுமி ஹிஷாலி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோருக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றியபோது தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்திருந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்ன வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சிறுமி ஹிஷாலினி, தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஜூலை 15ஆம் திகதி உயிரிழந்தார்.

இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் சிறுமியை வீட்டுப் பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோர் ஜூலை 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

இதேவேளை, சிறுமியின் மரண விடயம் தொடர்பான வழக்கில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான வழக்கில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ரிஷாத் பதியுதீனும் சந்தேகநபராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிறுமியை வீட்டுப் பணிக்கு அமர்த்திய தரகரும், ரிஷாத் பதியுதீனின் மைத்துனரும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து இன்று ரிஷாத்தின் மனைவிக்கும் மாமனாருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.