நாகர்கோவில் மகா வித்தியாலய படுகொலையின் நினைவேந்தல்.

யாழ்., வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலை மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டு வீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உள்ளிட்ட 39 பேரின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று பிற்பகல் தமிழ்த் தேசியக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் ஈகைச் சுடரேற்றி அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தியும் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்தார்.

1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் தமது பாடசாலை விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் விமானப்படையின் புக்காரா விமானம் நடத்திய கண்மூடித்தனமான குண்டுவீச்சில் 21 மாணவர்கள் பலியாகினர். பலர் படுகாயங்களுக்குள்ளாகினர்.

விமானத்தின் சத்தத்தைக் கேட்ட மாணவர்கள் பயத்தால் ஒரு மரத்தின் கீழ் நின்றவேளை மரத்தின் மீது விழுந்த குண்டால் அந்த இடத்திலேயே 21 மாணவர்கள் உடல் சிதறிப் பலியானார்கள். இந்தக் கொடூர தாக்குதலில் 18 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.