சர்வாதிகாரப் போக்கை நிறுத்து! தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

தோட்ட முகாமையாளரின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்தும் டிஜிட்டல் தராசு வேண்டாம் எனக் கோரியும் பொகவந்தலாவை கீழ்ப் பிரிவு தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பொகவந்தலாவை பெருந்தோட்டக் கம்பனிக்குட்பட்ட பொகவந்தலாவை கீழ்ப் பிரிவு சின்டாகட்டி கோயில் முன்றலிலே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தாவது:-

“டிஜிட்டல் தராசில் பச்சைக் கொழுந்தை அளக்கும்போது கொழுந்தின் எடையில் மோசடி இடம்பெறுகின்றது. நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று நேரம் கொழுந்து நிலுவை இடம்பெறுகையில் சுமார் 10 கிலோகிராம் வரை மோசடி இடம்பெறுகின்றது.

உண்மையான கொழுந்தின் எடையை எங்களால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவே, முகாமையாளரிடம் டிஜிட்டல் தராசு வேண்டாம்; கடந்த காலத்தில் போல் சாரதாரண தராசை இனி கொழுந்து அளக்கப்பயன்படுத்துமாறு கோரினோம். ஆனால், முகாமையாளர் அதைச் செய்யாது இன்றும் டிஜிட்டல் தராசிலே கொழுந்தை அளக்க முற்படுகின்றார்.

ஆயிரம் ரூபா நாட் சம்பளம் அறிவிக்கப்பட்ட காலம் தொட்டே தோட்ட நிர்வாகம் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கி விட்டது. கொழுந்து இருக்கும் காலத்தில் எங்களால் 18 கிலோ கிராம் பச்சைக் கொழுந்து பறிக்க முடியும் ஆனால், கொழுந்து இல்லாத இந்தக் காலத்தில் எவ்வாறு 18 கிலோ எடுக்க முடியும்?

12,13 கிலோ எடுத்தால் அரை நாள் பெயரே போடுகின்றார். நாங்கள் எப்படி எங்களது வாழ்கையைக் கொண்டு செல்வது?” என்று கேள்வி எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.