சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்வு!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு சிலிண்டர் ரூ.915.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 4ம்தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15ம் தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்டன. தொடர்ந்து, பிப்ரவரி 25ம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. மார்ச் மாதம் 1ம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஒரு மாதத்தில் 125 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டது. தொடர் விலையேற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதன் பின்னர், ஜூன், ஆகஸ்ட் செப்டம்பர் ஆகிய மாதங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் தொடக்கத்தில் ரூ.700க்கு விற்கப்பட்ட வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயுவின் விலை ரூ.900 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.915.50 ஆக அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் 200 ரூபாய்க்கும் மேல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.