பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த கேகேஆர்!

ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 54ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணி சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 56 ரன்களைச் சேர்த்தார்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் முன்னணி வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், லியாம் லிவிங்ஸ்டோன், ஷிவம் துபே, கிளென் பிலீப்ஸ் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் 35 ரன்களுக்குள்ளாகவே அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அதன்பின் களமிறங்கிய ராகுல் திவேத்தியா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதியில் அவரும் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களை மட்டுமே எடுத்தது. கேகேஆர் அணி தரப்பில் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளையும், லோக்கி ஃபர்குசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் மூலம் கேகேஆர் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் கேகேஆர் அணி நடப்பு சீசன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.