மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசுக்கு மக்கள் தக்க பதிலடி வழங்குவர்.

“அரசு ‘பெயில்’ என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். எனவே, மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் அரசுக்கு மக்களின் தக்க பதிலடி காத்திருக்கின்றது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்களால் நாட்டுக்கு எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் வரக்கூடும். முறையற்ற அரச முகாமைத்துவம் காரணமாகவே இந்நிலைமை ஏற்படும்.

நாட்டின் நிர்வாகம் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளது. இந்நிலைமையை நான் அன்றே சுட்டிக்காட்டினேன். பிரதேச சபையில்கூட அங்கம் வகிக்காத ஒருவரின் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என வலியுறுத்தியே கட்சியில் இருந்து வெளியேறினேன்.

மாகாண சபைத் தேர்தல் தற்போது அவசியமில்லை. அரசு அதனை நடத்தினால் தேர்தலில் போட்டியிடவேண்டிய நிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படும். அவ்வாறு நடத்தினால் அரசுக்கு வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலைதான் ஏற்படும்.

பொருட்களின் விலை உயர்வு உட்பட எல்லாத் துறைகளிலும் பிரச்சினை. இந்த அரசால் முடியாது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆக அரசு ‘பெயில்’ என்பது உறுதியாகியுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எமது நாட்டுக்குத் தேவையில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.