தென் சென்னையில் பிரபல ரவுடியாக வலம்வந்த நாகூர் மீரான் நேற்றுஇரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை!

தென் சென்னையில் பிரபல ரவுடியாக வலம்வந்த நாகூர் மீரான் என்பவரை நேற்றுஇரவு மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஆதம்பாக்கம் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சென்னை ஆதம்பாக்கம் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகூர்மீரான் (வயது-32) இவர் தென் சென்னை பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. நாகூர் மீரான் மீது ஆதம்பாக்கம், கே.கே.நகர், குன்றத்தூர், கொரட்டூர் உள்பட பல போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி,வழிப்பறி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

நாகூர் மீரான் வெளி மாவட்டங்களுக்கு கூலிப்படையாக சென்று பல கொலைகள் செய்ததாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். ஆதம்பாக்கம் பகுதியில் ரவுடி கோஷ்டிகள் இருப்பதால் நன்மங்கலம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகர் 3,வது தெருவில் உள்ள நண்பர் வீட்டிற்கு நேற்று நாகூர் மீரான் வந்துள்ளார். அப்போது ஒரு கும்பல் வீட்டிற்குள் நுழைந்து கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக அவரை வெட்டி விட்டு தப்பி சென்றது.
தலை, முகம், கை, கால் ஆகிய பகுதியில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த நாகூர்மீரான் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகூர் மீரான் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆதம்பாக்கம் போலீசார் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.