விரைவில் புதிய அரசமைப்பு! – அமைச்சர் காமினி உறுதி

“புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும். அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் இவ்வருடத்துக்குள் நிறைவுபெறும்.”

– இவ்வாறு அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு கடந்த அரசே பொறுப்புகூறவேண்டும். சட்ட திருத்தத்தை மேற்கொள்ளாமல் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, உரிய ஏற்பாடுகளில் பின்னர் அடுத்த வருடம் முற்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கின்றேன்.

அதேவேளை, புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும். அதற்கான வரைவு நகலை தயாரிப்பதற்காக நிபுணர் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு ஆளும், எதிரணி என அனைத்துத் தரப்புகளிடம் கருத்துகளை, ஆலோசனைகளைப் பெற்றது. இவ்வருடத்துக்குள் ஆரம்பகட்ட வரைவு நகல் முன்வைக்கப்படும்.

நாட்டில் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் தவறால் விலை உயர்வு இடம்பெறவில்லை. உலக சந்தை நிலைவரத்துக்கு அமையவே மாற்றம் இடம்பெற்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.