பிகார் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 பேர் குற்றவாளிகள்

பிகாரில் கடந்த 2013-இல் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்று தேசிய புலனாய்வு அமைப்பின்(என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. வழக்கில் இருந்து ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி அப்போதைய குஜராத் முதல்வரும் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்கு பாஜக ஏற்பாடு செய்திருந்தது. 2014-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலையொட்டி அந்தப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் நடந்த இடத்துக்கு அருகே பல இடங்களில் குண்டு வெடித்தது. இதில், 6 பேர் உயிரிழந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி11 பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அவர்களில் ஒருவர் 18 வயதுக்கு உள்பட்டவர் என்பதால், அவர் மீதான விசாரணை சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மற்ற 10 பேர் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. இதுகுறித்து என்ஐஏ தரப்பு சிறப்பு வழக்குரைஞர் லலன் பிரசாத் கூறுகையில், “வழக்கில் 9 பேரை குற்றவாளிகள் என நீதிபதி குர்வீந்தர் மெஹரோத்ரா தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை நவம்பர் 1-ஆம் தேதி அறிவிக்கப்படும். போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.