அமெரிக்காவை சேர்ந்த விலை குறைந்த கோவிட் ‘தடுப்பூசி’ இந்தியாவில் சோதனை!

அமெரிக்காவை சேர்ந்த ‘Akston Biosciences’ என்ற நிறுவனம் இந்தியாவில் இரண்டாம் தலைமுறை (2nd Generation) கோவிட்-19 தடுப்பூசியை விரைவில் பரிசோதிக்க உள்ளது. இது குறைந்த செலவில் விரைவாக தயாரிக்கப்படும் தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பூசிக்கு தற்காலிகமாக ‘AKS 452’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு 25°C வெப்பநிலையில் வைத்திருக்கலாம். 37°C வெப்பநிலையில் ஒரு மாதம் வரைக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இந்தியாவில் சுமார் 12 இடங்களில் இந்த தடுப்பூசிக்கான சோதனை ஒரு மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சோதனை 2 மற்றும் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. சுமார் 1,600 பேர் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

‘இந்தியாவிற்கு உள்நாட்டு பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசி தேவையில்லை. ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் இந்த தடுப்பூசிகள் மிகுந்த உபயோகமாக இருக்கும். மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள மருத்துவமனைகளில் இந்த சோதனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி சோதனையில் நல்ல முடிவை கொடுத்தால், ஏழை மற்றும் வளரும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும்.

ஏனெனில் இந்த தடுப்பூசி குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம். குளிர்சாதன பெட்டியில் வைக்கும் காலம் மற்ற கோவிட் தடுப்பூசிகளை விட இது அதிக காலத்திற்கு தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கென்யா போன்ற வெப்பம் மிகுந்த நாடுகளிலும் இதனை பல மாதங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம். கடந்த ஆகஸ்ட் மாதம், இந்த கோவிட்-19 தடுப்பு மருந்தின் புரோட்டீன் சப்யூனிட்டின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் நல்ல முடிவுகள் வந்திருந்தது.

இதனை பரிசோதித்த நிறுவனம், ‘தடுப்பூசி தரமான மற்றும் குறைந்த விலையிலும்,ஆன்டிபாடி நுட்பங்களைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆலைகளிலும் வருடத்திற்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான அளவு உற்பத்தி செய்யும் திறன் கொண்டது ஆகும். முதல் தலைமுறை தடுப்பூசிகள் ஆன கோவிஷீல்ட், கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் மற்றும் ஃபைசர்-பயோஎன்டெக், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் போன்றவற்றின் தயாரிப்புகளில் வேலை செய்தவை இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தற்போது கண்டுபிடிப்பில் இருக்கும் மற்ற தடுப்பூசிகள் பக்கவிளைவுகளைக் குறைத்தாலோ அல்லது ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டாலோ அது இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை தடுப்பூசிகளை உருவாக்க வழிவகுக்கும். நீட்டிக்கப்பட்ட இதன் நிலைத்தன்மை, 90μg டோஸின் தரவு, உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19-பாசிட்டிவ் கன்வெலசென்ட் சீரம் மாதிரிகளை விட அதிகமான டைட்ரேஸில் 100% செரோகான்வெர்ஷனை வழங்குகிறது. இது உற்பத்தி செய்வதை அதிகரிக்கிறது. கோவிட் நோய்க்கு எதிராக உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை மிக எளிதாகப் பாதுகாக்கும் ஆற்றலை கொண்டுள்ளது’ என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.