2-வது டெஸ்ட் நியூசிலாந்திற்கு வெற்றி இலக்காக 540 ரன்கள் நிர்ணயம்

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் துவக்க வீரர் மயங்க் அகர்வால் 150 ரன்கள் குவித்து அசத்தினார்.

நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் அள்ளி வரலாற்று சாதனை நிகழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு இந்தியா சுடச்சுட பதிலடி கொடுத்தது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி 62 ரன்களில் சுருண்டது. அடுத்து நியூசிலாந்துக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காத இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்து இருந்தது.

3 ஆம் நாள் ஆட்டம் துவங்கியதில் இருந்தே இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. முதல் இன்னிங்சில் 150 ரன்கள் குவித்த மயங்க் அகர்வால் 2-வது இன்னிங்சிலும் அரைசதம் (62 ரன்கள்) அடித்து அசத்தினார். இந்திய அணி 70 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்து இருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 540 – ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் 2-வது இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகளை கைப்பற்ற்றினார். நியூசிலாந்து அணி தற்போது தனது 2-வது இன்னிங்சில் பேட் செய்து வருகிறது. மும்பை டெஸ்ட் போட்டியை பொருத்தவரை தற்போதைய சூழலில் இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.