லட்சத்தீவு மக்களை கொதிப்படைய செய்த புதிய அறிவிப்பு

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள லட்சத்தீவில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டு வந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரபிக் கடலில் அமைந்துள்ள லட்சத் தீவு பல்வேறு தீவுகளில் கூட்டமாகும். இங்குள்ள ஒருசில தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசித்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இத்தீவில் உள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிறுக்கிழமை விடுமுறை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள லட்சத்தீவில் அவர்கள் தொழுகை நடத்துவதற்கு வசதியாக பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், லட்சத்தீவில் இனி பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை கிடையாது என்றும் அதற்கு பதிலாக ஞாயிறுக்கிழமை விடுமுறை தினமாகவும் அறிவித்து லட்சத்தீவு கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லட்சத்தீவு எம்.பி பிபி முகம்மது பைசல் இது தொடர்பாக கூறுகையில், வெள்ளிக்கிழமை விடுமுறையை ரத்து செய்த மத்திய அரசின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது. 60 ஆண்டுகளுக்கு முன்பு லட்சத்தீவில் பள்ளிகள் தொடங்கப்பட்ட காலம் முதலே வெள்ளிக்கிழமை தான் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் குறித்து யாரிடமும் ஆலோசனை நடத்தவில்லை. அரசின் தன்னிச்சையான முடிவாக இதை பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.