வடக்கு, கிழக்கு ஒருபோதும் மீண்டும் இணையமாட்டாது! – தினேஷ் திட்டவட்டம்.

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்க் கட்சிகள், இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒருபோதும் மீண்டும் இணைக்க முடியாது. இதற்கு முஸ்லிம் மக்கள் அனுமதி வழங்கமாட்டார்கள்.”

இவ்வாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகமோ அல்லது முஸ்லிம்களின் தாயகமோ அல்ல. இரு மாகாணங்களும் இலங்கை எனும் நாட்டுக்குள்ளேயே அமைந்துள்ளன. எனவே, மாகாணங்களைப் பிரித்து எந்த இனத்தவர்களும் சொந்தம் கொண்டாட முடியாது. அனைவரும் ஒரே நாட்டுப் பிள்ளைகள். சகலரும் இலங்கையர்கள் என்ற நாமத்துடன் இங்கு வாழ வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அன்று இணைந்திருந்தபடியால்தான் இனக்கலவரம் வெடிக்க ஆரம்பித்தது. வன்முறைகள் தாண்டமாடத் தொடங்கின.

இந்த இரு மாகாணங்களையும் முன்வைத்துத்தான் ‘தமிழீழம்’ என்ற கனவுடன் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஏந்திப் போராடினர். இதனால் நாடெங்கும் இரத்த ஆறு ஓடியது. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டார்கள்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற இந்தத் துன்பியல் நிகழ்வுகளைத் தமிழ்க் கட்சிகள் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.