உக்ரைன் விவகாரம்: பதற்றத்தை தணிக்க அமெரிக்கா கோரிக்கை.

ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் உக்ரைன் ஒரு அங்கமாக இருந்தது. 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் பிளவுபட்ட பிறகு ரஷியாவில் இருந்து பிரிந்து உக்ரைன் தனி நாடாக உருவெடுத்தது. ஆனாலும், உக்ரைனை தனது நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற எண்ணம் ரஷியாவுக்கு தொடர்ந்து உள்ளது.

இதனால், இரு நாடுகளுக்கு இடையே எல்லைப்பிரச்சினைகளும் நிலவி வருகிறது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், உக்ரைனை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர்க்கவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.

உக்ரைன் நேட்டோவில் இணையும் பட்சத்தில் தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷியா கருதுகிறது. இதனால், கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இதனிடையே, ரஷியா படையெடுக்கும் பட்சத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, நேட்டோ படைகள் களமிறங்களால் என எதிர்பார்க்கபடுகிறது. உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளையும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அளித்து வருகின்றன.

அதேவேளை, உக்ரைன் மீதான போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா – ரஷியா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஐ.நா. சபையிலும் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இதற்கிடையில், போர் பதற்றத்தை தணிக்க முன்வருமாறு ரஷியாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில், போர் பதற்றத்தை தணிக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு ரஷியா இன்று எழுத்துப்பூர்வ பதில் அனுப்பியுள்ளது. ரஷியாவின் எழுத்துப்பூர்வ பதிலில் என்ன உள்ளது என்பது குறித்த தகவலை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை. பேச்சுவார்த்தை நிகழ்வுகளை பொதுவெளியில் சொல்வது உகந்ததல்ல என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.