அதிமுக முன்னாள் கவுன்சிலரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் : கோவையில் தேர்தல் பறக்கும் படை அதிரடி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கல்பனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தொண்டாமுத்தூரில் இருந்து தென்கரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் உலகநாதன் என்பவரது இரு வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் ரூ.3 லட்சம் இருந்தது தெரியவந்தது.

அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் கொண்டு வந்தனர். இதையடுத்து பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், உலகநாதன் விவசாயத்திற்கு பணம் எடுத்து வந்ததாக கூறி அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் விடுவிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.