வேட்பாளர்கள் செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்.. – தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் நகராட்சித் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன என்ற வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிக்குள்ளும், வாக்குசாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள்ளும் வாக்குசேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களை நிர்பந்திப்பது, மிரட்டுவது, வாக்காளர்களை வாக்குச்சாவடி செல்லவிடாமல் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் தேர்தல் அலுவலகங்களை அமைக்கக் கூடாது
வாக்குச்சாவடிக்கு அருகில் எந்தவித அறிவிப்பையும், அச்சடித்தோ, கையால் எழுதியோ ஒட்டக்கூடாது.
ஒலிபெருக்கி மூலமாக ஓசை எழுப்புதல், கூச்சல் மற்றும் குழப்பம் ஏற்படுத்தும் தகாத நடவடிக்கைகளில் வேட்பாளர்களோ அவர்களது ஆதரவாளர்களோ ஈடுபடக் கூடாது.
தேர்தல் நாளில் வாக்காளர்களுக்கு உணவு, மது மற்றும் போதை பொருட்களை வேட்பாளர்கள் வழங்கக்கூடாது.
வாக்குச்சாவடி செல்வதற்கு வாக்காளர்களுக்கு வாகன வசதிகளை வேட்பாளர்கள் ஏற்படுத்தித் தருவது தடை செய்யப்பட்டதாகும்.
வாக்குச்சாவடியைப் பொறுத்தவரை வாக்கெடுப்பு பணியாளர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர், வாக்குச்சாவடி முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்காளர்கள், வாக்காளர்களுடன் வரும் கைக்குழந்தைகளும் உள்ளே செல்லலாம்.
மாற்றுத்திறனாளி, பார்வையில்லா வாக்காளர்களுடன் வரும் உதவியாளர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்காளர்களை அடையாளம் காட்டும் பொதுப் பணியாளர்,வாக்குச்சாவடி தலைமை காவலர் அழைத்தால் வரும் காவலர், மாநில அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரியால் அனுமதிக்கப்பட்ட நபரும் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

Leave A Reply

Your email address will not be published.