யாழ். பல்கலையில் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக நான்கு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின்படி, வணிக முகாமைத்துவ பீடத்தின் சந்தைப்படுத்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி திருமதி சிவாணி சண்முகதாஸ், கலாநிதி சி. சிவேசன் ஆகியோர் சந்தைப்படுத்தலில் பேராசிரியர்களாகவும், விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பி. அபிமன் இரசாயனவியலில் பேராசிரியராகவும், பொறியியல் பீடத்தின் மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் துறையின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி த. திருவரன் மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.