நேட்டோ அமைப்பில் உறுப்பியம் கேட்டு இனி கெஞ்சப் போவதில்லை: ஸெலென்ஸ்கி

நேட்டோ அமைப்பில் உக்ரேன் சேர விரும்பியதே ரஷ்யப் படையெடுப்புக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டது.

உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelensky) நேட்டோ கூட்டணியில் சேர்வதைத் தாம் இனி வற்புறுத்திக் கேட்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.

ரஷ்யாவை அமைதிப்படுத்தும் வகையில் அவருடைய பேச்சு அமைந்திருந்தது.

நேட்டோ அமைப்பில் உக்ரேன் சேர விரும்பியதே ரஷ்யப் படையெடுப்புக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டது.

ஆக்கிரமிப்பைத் தொடங்குவதற்கு முன்னர், உக்ரேனில் உள்ள இரண்டு ரஷ்ய ஆதரவு வட்டாரங்களை, சுதந்திரம் பெற்ற பகுதிகளாக ரஷ்ய அதிபர் புட்டின் அறிவித்தார். அதிலும் உக்ரேன் சமரசமாகப் போக விரும்புவதாக அதிபர் ஸெலென்ஸ்கி சொன்னார்.

 

நேட்டோ அமைப்பு உக்ரேனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை; அமைப்பு சர்ச்சைக்குரிய காரியங்களில் ஈடுபடவும் ரஷ்யாவுடன் மோதவும் அஞ்சுகிறது.

என்று ABC News தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

நேட்டோவில் சேர்வது பற்றிக் குறிப்பிட்டபோது,

உறுப்பியம் கேட்டு மன்றாடும் நாட்டின் அதிபராக இருக்க விரும்பவில்லை.

என்று சொன்னார்.

பழைய சோவியத் யூனியனிடம் இருந்து ஐரோப்பாவைக் காக்க இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமைக்கப்பட்டது நேட்டோ கூட்டணி. தங்கள் அண்டை நாடான உக்ரேன் அதில் சேர்வதில் ரஷ்யாவுக்கு விருப்பமில்லை.

Leave A Reply

Your email address will not be published.