வவுனியா ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மூவரின் உடலங்களும் மீட்பு.

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் இன்று (14.04.2022) மதியம் மீட்கப்பட்டது என .கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூவரில் நேற்றைய தினம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. இருவரின் சடலம் மீட்கப்படாத நிலையில் நேற்றைய தினம் பெய்த மழை மற்றும் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டது.

இன்றைய தினம் (14.04.2022) மூன்றாவது நாளாகவும் காலை ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மதிய வேளையில் குறித்த யுவதி மற்றும் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதினி (வயது – 18), வவுனியாவை சேர்ந்த விதுசன் (வயது – 21) என தெரியவந்துள்ளது.

கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போதே இவர்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் சடலங்கள் கொத்மலை நீர்தேக்கத்தின் மின் உற்பத்திக்காக நீரை வழங்கும் நீர் தாங்கியிலிருந்தே மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் மீதான மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனைகளின் பின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.