பதவி விலகுமாறு மஹிந்தவுக்கு ‘மொட்டு’ எம்.பிக்கள் அழுத்தம்!

பிரதமர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு மஹிந்த ராஜபக்சவிடம் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

“தலைவரே, நீங்கள் பதவி விலகி, புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமியுங்கள். இல்லையேல் நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும் சவாலாக அமைந்துவிடும்” என்றும் மஹிந்தவுக்கு அவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அமைச்சரவை உடனடியாக ப் பதவி விலகி, சர்வகட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு நேற்று கடிதமொன்றை அனுப்பினார்.

இந்தக் கடிதம் ஊடகங்களில் வெளிவந்த பின்னர், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமரைச் சந்தித்து, பேச்சு நடத்தியுள்ளனர். அவ்வேளையிலேயே புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு கோரியுள்ளனர் .

எனினும், ராஜபக்சக்களின் விசுவாசியான தினேஷைப் பிரதமராக ஏற்பதற்கு அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் 11 கட்சிகளின் கூட்டணி தயாரில்லை எனக் கூறப்படுகின்றது. அக்கட்சிகளின் தேர்வு டலஸ் அழகப்பெருமவாக இருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.