அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

குடியிருப்பு வளாகத்தில் இருந்த அனைவரும் அலறியடித்தப்படி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அந்த மர்ம நபர் கண்ணில்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டார். இதில் 6 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனிடையே இந்த துப்பாக்கிச்சூடு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் கொலையாளி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அதன் பின்னர் போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 6 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன என்பது தெரியவராத நிலையில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.