மிரட்டும் அசானி புயல்… சென்னை விமான நிலையத்தில் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான அசானி புயல், தீவிரமடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நேற்றிரவு 11.30 மணியளவில் ஆந்திரப்பிரதேசத்தின் மசூலிப்பட்டினத்திலிருந்து 90 கிலோமீட்டர் தெற்கு, தென்கிழக்கில் மையம் கொண்டிருந்தது. இது வடமேற்கில் நகர்ந்து ஆந்திரப்பிரதேச கடலோரப் பகுதிக்கு இன்று வந்துசேரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.பின்னர் இது திசைமாறி வடக்கு, வடகிழக்கு திசையில் நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று காலை புயலாகவும், நாளை தீவிர காற்றழுத்தமாகவும் வலு குறையும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர். இந்த அசானி புயல் ஆந்திரா ஒடிசா மாநிலங்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அதோடு தமிழகத்திலும் பரவலாக ஆங்காங்கே பலத்த காற்றுடன் மழை பெய்தது.இந்நிலையில், நேற்று அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் உள்பட நகரங்களுக்கு செல்ல வேண்டிய 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் செல்ல வேண்டிய 3 விமானங்களும், விஜயவாடா செல்ல வேண்டிய 2 விமானங்களும் ராஜமுந்திரி செல்ல வேண்டிய ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டன.

இதேபோல, விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய நகரங்களில் இருந்து வர வேண்டிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பெங்களூரு, ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கான 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும் சென்னையில் இருந்து அந்தமானிற்கு காலை 8.15 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் காலை 11.30 மணிக்கும் காலை 8.30 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் பகல் 1 மணிக்கு காலதாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.