நூல் விலை ஏற்றம்… ஜவுளி உற்பத்தியாளர்கள் 15 நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு..

நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை , திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் நடைபெற்ற ஜவுளி உற்பத்தியாளர்கள் பொதுக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் சுமார் இரண்டு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறிகளுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நூல் கொடுத்து அதை துணியாக மாற்றி விற்பனை செய்து வருவார்கள். இந்நிலையில் , நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் விசைத்தறிகள் 15 நாட்களுக்கு இயங்காத சூழல் உருவாகும். நூல் விலை ஏற்றத்தை கண்டித்து ஏற்கனவே ஜவுளி உறத்தியாளர்கள் சார்பில் 50% உற்பத்தி வேலை நிறுத்தம், நூல் கொள்முதல் நிறுத்தம், 16 , 17 தேதிகளில் முழுமையான வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்களை செய்தும் நூல் விலைக்கு ஏற்றபடி ஜவுளி விலை உயர்வாகாத காரணத்தால் இந்த 15 நாள் வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் நடைபெற்ற ஜவுளி உற்பத்தியாளர்கள் பொதுக்குழுவில் முடிவு செய்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை , திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து 100 கோடி ருபாய் அளவிலான ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும். ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் விசைத்தறிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான கூலி தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவர்.

இந்நிலையில், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்து, நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடைவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.