நாட்டை மீட்க இராணுவம் தயார்; வாய்ப்புக் கேட்கின்றார் தளபதி சந்தர்ப்பம் வழங்கினால் செய்து காட்டுவார்களாம்.

“இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்க இராணுவத்தினரான எம்மால் முடிந்த சகல ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொடுத்து வருகின்றோம். எமக்கான சரியான வாய்ப்பு வழங்கப்பட்டால் நாம் செய்து காட்டுவோம்” என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“அதிகளவான பகுதிகளில் இராணுவம் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றது. அதேபோல் இராணுவத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய தேசிய உற்பத்தி செயற்பாடுகளிலும் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் நிலைமைகளின்போதும் இராணுவம் பாரிய சேவையை செய்தது. தற்போதும் பல்வேறு நெருக்கடி நிலைமைகளிலிருந்து மக்களை மீட்கவும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மாலான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க முடியும். அதற்கு எமக்கான சரியான வாய்ப்பு வழங்கப்பட்டால் செய்து காட்டுவோம். எம்மால் முடியாது என்று ஒன்றுமே இல்லை.

எந்தச் சவால்களையும் சந்திக்க நாம் தயாராகவுள்ளோம். எனினும், மக்கள் ஐக்கியமும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.