குரங்கு வைரஸ்.. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் கடிதம்

ஆப்பிரிக்காவில் காணப்படும் குரங்கு வைரஸ் முதன் முதலில் 1958ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் தொற்று கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆகிய நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 12 நாடுகளில் 80 பேருக்கு பரவியுள்ளது.

இந்நிலையில் குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்கு கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள் தகவல் தர வேண்டும் என பொதுசுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், வெளிநாட்டில் குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே தகவல் தரவேண்டும். குரங்கு அம்மை பாதிப்பு என சந்தேகத்திற்கிடமான அனைத்து நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். குரங்கு அம்மைக்கான அறிகுறி என சந்தேகம் இருந்தால் அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் புனேவுக்கு ஆய்வுக்காக அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் குரங்கு காய்ச்சல் பரவவில்லை என்றும், எனவே மக்கள் யாரும் இது குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.